ஜென்ம நட்சத்திர தோஷம்

ஜென்ம நட்சத்திர தோஷமும் பரிகாரங்களும்

அஸ்வினி:
முதற்பாகத்தில் பிறந்த குழந்தையின் தந்தைக்கு மூன்று மாதங்களுக்கு இன்னல்களும், பொருள் நஷ்டமும் உண்டாகும். அதற்கு சொர்ண தானமளிக்க வேண்டும். மற்ற மூன்று பாதங்களில் பிறந்தால் சிறிதளவு தோஷமுண்டு. இதற்கு வஸ்திர தானம் செய்திடல் வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கூத்தனூரில் எழுந்தருளியுள்ள கலைவாணியை வழிபட்டு வந்தால் எல்லா சிறப்புகளையும் பெறலாம்.

பரணி:
முதல் பாதம் தோஷமில்லை. இரண்டாவது பாதத்தில் பிறந்தால் தோஷமுண்டு. மூன்றாவது பாதம் மிகுந்த துன்பத்தை தரும். 4வது பாதம் முதல் 8 நாழிகைக்குள் பிறந்தால் தாயாரின் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகும். இதற்கு சாந்தியாகத் துர்க்கை அல்லது காளிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்ய வேண்டும். பொன் அல்லது எருமை தானமளிக்கலாம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் பட்டீஸ்வரம் சென்று துர்க்கையை வழிபட்டால் வளம் பெருகும்.

கிருத்திகை:
முதலிரண்டு பாதங்கள் தோஷமில்லை. மற்ற இரண்டு பாதங்களில் பிறந்தால் பெற்றோர்களுக்கு இன்னல்களும் இடையூறுகளும் உண்டாகும். ஆடு தானம் சிறந்தது. சூரிய ஆராதனையும், திருவண்ணாமலையில் உள்ள அக்னி லிங்க வழிபாடுகளும் மன அமைதியையும், பொருள் வளமையையும் நல்கும்.

ரோகிணி:
முதற் பாகம் அக்குழந்தைக்கும், மற்றும் அதன் தாய் மாமனுக்கும், இரண்டாம் பாதம் அதன் தந்தைக்கும், மூன்றாம் பாதம் அதன் தாயாருக்கும் தோஷம் விளைவிக்கும். நான்காம் பாதம் சாதாரணமானது எனினும் நான்கு பாதங்களுக்கும் தோஷமுள்ளது, அத்துடன் தாய் மாமனுக்கும் கண்டம் என நூல்கள் விலக்குகின்றன. எனவே அவரவர்களின் சக்திக்கேற்ப சாந்தி ஹோமங்கள் செய்வதுடன், வெள்ளியைத் தானமளிக்க வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் திருவருணை கோவிலில் பிரம்ம தீர்த்தம் எதிரில் உள்ள பிரம்ம லிங்கத்தை வழிபட்டு வந்தால் திரண்ட செல்வமும், நிறைந்த ஞானமும் பெறலாம்.

மிருகசீரிடம்:
நான்கு பாதங்களும் தோஷமில்லை. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெளர்ணமி விரதமிருந்து சந்திரனை வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களையும் பெறலாம். திங்களூர் சென்று வழிபட்டால் தீராத குறைகளெல்லாம் தீரும்.

திருவாதிரை:
முதல் மூன்று பாதங்கள் தோஷமற்றது. நான்காவது பாதத்தில் முதல் எட்டு நாழிகை வரையில் தாயாருக்கு கண்டம். இதற்கு பசு நெய் தானமளித்திடல் வேண்டும். செவ்வாய் அல்லது வியாழக்கிழமைகளில் பிறந்த திருவாதிரை நட்சத்திரத்தை சார்ந்தவர்கள் விஷ்ணு ஸகஸ்ர நாமம், ருத்ர ஜபம் செய்துவந்தால் நீண்ட ஆயுளைப் பெறலாம்.

புனர்பூசம்:
நான்கு பாதங்களும் தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சூரிய ஆராதனை செய்வது சாலச்சிறந்தது. திருவண்ணாமலையில் உள்ள சூரிய லிங்க ஆராதனை மிகவும் புகழையும், பொருளையும் வழங்கும்.

பூசம்:
முதற்பாதம் தாய்மாமனுக்கும், 2து பாதம் மத்திய (நடு) பாகம் மற்றும் மூன்றாம் பாதம் பெற்றோர்களுக்கும் துன்பம் உண்டாக்கும். நான்காம் பாதம் தோஷமற்றது. இரண்டாம் பாதமும், கடக லக்னமும் கூடிய ஆண்குழந்தை தந்தைக்கு கண்டத்தை உண்டாகும். இரவு நேரங்களில் பிறந்த பெண்குழந்தையால் தாயாருக்கு கெடுதி. இதற்கு பரிகாரமாக பசுவை தானம் செய்தல் வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தர்ஷினா மூர்த்தியையோ, ஹயக்ரீவரையோ வழிபட்டு வருவது சிறந்ததாகும்.

ஆயில்யம்:
முதற்பாகம் சாதாரணமானது. இரண்டாவது பாதம் அக்குழந்தைக்கும், அதன் தந்தைக்கும் தோஷம். மூன்றாவது பாதம் அதன் தாயாருக்குக் கெடுதி. நான்காம் பாதம் அக்குழந்தைக்கும் அதன் தந்தைக்கும் துன்பத்தை தரும். இதற்கு கிரக சாந்திகள், ஜபம், தானங்கள் அவசியம் செய்திடல் வேண்டும். நான்காம் பாதத்தில் பிறந்த குழந்தைக்கு ஆயுஷ் ஹோமம் செய்வதும், ஏழை எளயவர்களுக்கு வஸ்திரம் அன்னதானம் செய்வது மிகவும் அவசியம். இந்த நட்சத்திரத்தைச் சார்ந்தவர்கள் சர்பேஸ்வரனை வணங்குவது நல்ல பலன்களை தரும். ஸ்ரீகாளகஸ்தி மற்றும் திருநாகேஸ்வரம் சென்று வழிபாடு செய்வது சிறந்தது.

மகம்:
முதல்பாகம், குழந்தையின் தந்தைக்கு தன நஷ்டத்தை அக்குழந்தை பிறந்தது முதல் ஐந்து மாதம் வரை உண்டாக்கும். ஈஸ்வரனுக்கு அபிஷேக ஆராதனைகள், கிரக சாந்திகள், தானங்கள் செய்திடலாம். இரண்டு மற்றும் நான்காவது பாதம் சிறிதளவு தோஷம் உள்ளது. மூன்றாவது பாதத்தில் பிறந்த குழந்தை ஆண் ஆனால் தந்தைக்கும், பெண் என்றால் தாயாருக்கும் தோஷத்தை உண்டாக்கும். இந்த நட்சத்திரத்தைச் சார்ந்தவர்கள் பித்ரு தேவதைகளை வழுவாது ஆராதனை செய்வது, திருக்கடையூர், ஸ்ரீவாஞ்சியம், திருமீச்சூர், திருப்பைஞ்சீலி ஆகிய திருத்தல வழிபாடுகளும் பெரும் நன்மையளிக்கும்.

பூரம்:
நான்கு பாதங்களும் சிறிதளவு தோஷமுள்ளது. இதற்கு பரிகாரமாக ருத்ராபிஷேகம் செய்வது மிகச் சிறந்தது. இந்த நட்சத்திரத்தைச் சார்ந்தவர்கள் அருணம் அல்லது மஹாஸரைம் பாராயணம் செய்வது மற்றும் ஆதித்ய ஹருத்யம் நாள்தோறும் படிப்பது, சூரியனை வழிபடுவது நன்மையாகும்.

உத்திரம்:
முதற்பாதம், முதலிரண்டு நாழிகைக்குள் பிறந்த குழந்தை ஆண் ஆயின் தந்தைக்கும், பெண் ஆயின் தாயாருக்கும் தோஷமுண்டாகும். இது இரண்டு மாதத்திற்குண்டு. இரண்டு மற்றும் மூன்றாம் பாதம் சாதாரணமானது. நான்காம் பாதம் தந்தையின் சகோதரர்களுக்கு தோஷமுண்டு பண்ணும், இதற்குப் பரிகாரமாக தைல (எண்ணெய்) தானம் செய்ய வேண்டும். இந்த நட்சத்திரத்தைச் சார்ந்தவர்களுக்கும் பன்னிரண்டு ஆதித்யர்தனைச் சேர்ந்த 'ஆர்ய மன்' என்னும் சூரியனை வழிபடல் வேண்டும்.

அஸ்தம்:
ஒன்று இரண்டு மற்றும் நான்காம் பாதம் தோஷமற்றது. மூன்றாம் பாதத்தில் முதல் நான்கு நாழிகைக்குள், ஆண் ஆனால் தந்தைக்கும், பெண் என்றால் தாய்க்கும் தோஷமுண்டு இது ஒன்பது மாதங்கள் நீடிக்கும். இத்தோஷத்தை ஸுவர்ணம் என்று கூறப்படும். பொன் தானத்தால் நீக்கிக்கொள்ள முடியும். ஆதித்ய ஹருதயம் பாராயணமும், சூரிய வழிபாடும் மேற்கொள்ள எல்லா நன்மைகளும் விளையும்.

சித்திரை:
முதல் மூன்று பாதங்கள் தாயாருக்கு, தந்தைக்கு மற்றும் சகோதரர்களுக்கு தோஷமுண்டாகும். இரண்டாவது பாதத்தில் முதல் ஆறு நாழிகைக்குள் எனின் குழந்தையின் தாய்க்கு மிகவும் தோஷம். முதலிரண்டு பாதங்களுக்குரிய கன்னி ராசியில் பகலில் பிறக்கும் ஆண் குழந்தை தந்தைக்கும், பெண் குழந்தை தாயாருக்கும் தோஷமுண்டாகும். இத பிறந்த ஆறுமாத காலத்திற்கு நீடிக்கும். நான்காம் பாதம் பிறந்த குழந்தை தந்தைக்கு துயரமும் உண்டாகும். வஸ்திர தானம் ஏற்ற பரிகாரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்திரனை வழிபடல் வேண்டும. திருவண்ணாமலையில் கிழக்கு திசையில் உள்ள அஷ்டலிங்கங்களில் முதல் லிங்கமான இந்திர லிங்க வழிபாடு, செல்வம், செல்வாக்கு, பதவி உயர்வு தரும்.

சுவாதி:
நான்கு பாதங்களும் தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாயு தேவனை வணங்குதல் நன்று. அருணையிலுள்ள வாயுலிங்க வழிபாடு சாலச்சிறந்தது. திருமகளையும் வணங்குவது ஏற்றது.

விசாகம்: நான்காம் பாதம் தோஷம். மற்ற பாதங்கள் தோஷமில்லை. நான்காம் பாதம் முதல் எட்டு நாழிகைக்குள் முதற் குழந்தையாக இருப்பின் தாயாருக்கு கண்டமென்றும் கூறப்படுகிறது. செவ்வாய்கிழமை, சஷ்டி, கிருத்திகை போன்ற சுப்பிரமணி சாமிக்குரிய நாட்களில் செந்நிற ஆடைச் சாற்றி சிவப்பு மலர்கொண்டு அபிஷேக ஆராதனைகள் செய்வதும், துவரை மற்றும் கோதுமை தான்ய தானங்கள் செய்வதும் சிறப்பான பலன்களை தரும்.

அனுஷம்:
தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மித்ர என்னும் துவாதச ஆதித்யர்களில் ஒருவரான சூரியனை வழிபடல் வேண்டும். வருணனையும் திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் வருணலிங்கத்தை வழிபடுவதும் மிகவும் சிறந்தது.

கேட்டை:
நான்கு பாதங்களும் தோஷத்தை தருவன. முதல் பாதத்தில் பிறந்தது. ஆண் குழந்தையாயின் மூத்த சகோதரனுக்கும், பெண் என்றால் மூத்த சகோதரிக்கும், 2ஆம் பாதம் மற்றமுள்ள சகோதரர்களுக்கும், உறவினர்களுக்கும், 3ஆம் பாதம் அக்குழந்தையின் தாய்க்கும், செல்வத்திற்கும், 4ஆம் பாதம் அக்குழந்தை மற்றும் அதன் தாயாருக்கும் கண்டமாகும். பசு அல்லது தங்கத்தால் செய்த பசுவினை தானமளிக்க வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 'தேவேந்திரனை' வழிபடல் வேண்டும். இந்த நட்சத்திர பெண்கள் திருமணத் தடை நீங்க தூய வெண்மையான மலர் கொண்டு தேவேந்திரனை மனதில் தியானித்து வழிபாடு செய்தால் நல்ல கணவர் அமைவார். அருணையிலுள்ள இந்திரலிங்கப் பூஜையும் மிகவும் சிறந்த பலன்களை தரும்.

மூலம்:
முதல் பாதத்தில் ஆண்குழந்தை பிறந்தால் தந்தைக்கு துன்பம், பெண் குழந்தையாயின் கால்நடைகள் (பசுக்கள்) நஷ்டமாகும். 2ஆம் பாதம் ஆண் குழந்தையால் அதன் தாய்க்கு துன்பம். பெண்ணாயின் சுபம். 3ஆம் பாத ஆண் குழந்தையால் பெருள் நஷ்டம், சகோதரர்களுக்குத் துன்பம். 3ஆம் பாதம் பெண் குழந்தையினால் தந்தையின் வம்சத்திற்கே நஷ்டம். 3ஆம் பாதம் பகலில் பிறந்தால், அதன் தந்தைக்கும், மாலைப்பொழுது எனின் அக்குழந்தையின் தாய் மாமனுக்கும், இரவு எனின் அதன் தாய்க்கும் உதயவேளை அல்லது காலை எனின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்குத் தீங்கு. இந்த நட்சத்திரத்தில் எப்பாதத்தில் பிறந்திருப்பினும், மஹன்யாஸத்துடன் கூடிய ருத்ராபிஷேகம் செய்திடல் வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் பிரஜாபதியை வழிபட்டால் வாழ்க்கையில் எல்லா நலன்களும் பெறுவார்கள்.

பூராடம்:
1, 2 மற்றும் 4ஆம் பாதங்களில் பிறந்தால் சிறிதளவு தோஷம் உண்டு. மூன்றாம் பாதத்தில் புத்திரன் தந்தைக்கும், புத்ரியானால் தாய்க்கும் தோஷமாகும். இத்தோஷம் எட்டாம் மாதம் வரையில் இருக்கும். தனுசு ராசியில் உள்ள இந்த நட்சத்திரத்தில் சூரிய உதய வேளையிலும், அஸ்தமிக்கும் வேளையிலும், நடு இரவிலும் புத்ர ஜனனமானது அதன் தந்தைக்கும், மற்றும் அச்சிசுவிற்கும் பெரும் தோஷமாகும். நவக்கிரகம் மற்றும் நட்சத்திர ஹோமம் செய்வதும், புனித கங்கை நீரினால் சிவபெருமானுக்கு அபிஷேகமும் செய்ய வேண்டும். இந்த நட்சத்திரத்தில் உதித்தோர். திருவானைக்காவல் இறைவனையும், திருவண்ணாமலையில் உள்ள வருணலிங்கத்தையும் வழிபட்டால் நல்ல செல்வமும், செல்வாக்கும் பெறலாம். பெளர்ணமி விரதம் ஏற்றது. தேங்காய், நெய் தீப வழிபாடு சாலச்சிறந்தது.

உத்திராடம்: நான்கு பாதங்களும் தோஷமில்லையாயினும், செவ்வாய்க்கிழமை உத்திராட நட்சத்திரத்தில் பெண் குழந்தை பிறந்தால் 'விஷ கன்னியா' யோக மேற்படும். அப்பெண் திருமணமாகி, கணவன் வீடு செல்லும் வரையில் பிறந்த வீட்டில் இன்னல்கள், இடையூறுகள் உண்டாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விஸ்வதேவதைகளையும், விநாயகரையும் உள்ளன்புடன் வழிபட்டால் வாழ்க்கையில் வளம் பலம் பெறலாம். பாண்டிச்சேரி மணக்குள விநாயகர், திருப்பாதிரிப்புலியூர் பாதிரி விநாயகர், திருவண்ணாமலை ஆநிறை கணபதி ஆகியோரின் வழிபாடு மிக மிக உயர்ந்தது.

திருவோணம்:
தோஷமில்லை. இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் ஏகாதசி விரதம் இருந்து திருமாலை வழிபட்டாலும், சிரவண விரதமேற்கொண்டு திருவேங்கடமுடையானை ஆராதித்தாலும், லஷ்மி குபேர திருவுருவப் படத்தை - குபேர யந்திரம் - மந்திரம் கொண்டு பூஜித்தாலும், திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள குபேரலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்தாலும் பெரும் பொருளும், புகழும் பெறுவார்கள். வாகனப் பிராப்தியுண்டாகும்.

அவிட்டம்:
தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஷ்டஸுக்களை ஆராதிக்க வேண்டும். பித்துரு முக்தி ஸ்தலங்களில் இராமேஸ்வரம், காசி, கயை, லால்குடி அருகிலுள்ள பூவளூர் ஆகிய ஊர்களில் உள்ள இறைமூர்த்திகளை ஆராதனை செய்வதும் மிகுந்த நன்மை பயக்கும்.

சதயம்: தோஷமில்லாதது. இந்த நட்சத்திரத்தில் உதித்தோர் திருவானைக்காவல் இறைவனையோ, திருமீச்சூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமேக நாதரையோ, திருவருணையில் உள்ள வருணலிங்கத்தையோ வழிபட்டால் இன்னல்கள் எல்லாம் நீங்கி இன்பமுறுவர்.

பூரட்டாதி:
முதல் மூன்று பாதங்கள் சிறிதளவே தோஷமுள்ளது. நான்காவது பாதத்தில் முதல் எட்டு நாழிகைக்குள் பிறந்தால் சிசுவின் தாய்க்கு கண்டம். அதுவும் முதல் குழந்தை எனின் தோஷம் அதிகம். பொன் தானம் கொடுக்க வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் செல்வத்தில் சிறந்தோங்க, லஷ்மி குபேர பூஜையை மேற்கொள்ள வேண்டும். திருவண்ணாமலை கிரிவலப் பாதையிலுள்ள குபேரலிங்கத்தையும் சீர்காழி அருகிலுள்ள ஸ்ரீலஷ்மி புரீஸ்வரரையும் வழிபடுவது சாலச் சிறந்தது.

உத்திரட்டாதி:
தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர், காமதேனுவை பூஜித்தாலும், பட்டீஸ்வரத்திலுள்ள தேனுபுரீஸ்வரரை வழிப்பட்டாலும் நல்லவையெல்லாம் இடையூர் இன்றி வெற்றியுடன் நடைபெறும்.

ரேவதி:
முதல் மூன்று பாதத்தில் பிறந்தால் சிறிதளவு தோஷமுண்டாகும். நான்காம் பாதத்தில் பிறந்தால் குழந்தையின் தந்தைக்கும் தோஷமுண்டு. மூன்று மாதம் இருக்கும். இத்தோஷம் விலக பொன்னாலான பசு உருவம் மற்றும் பசும் நெய் தானமளித்திடல் வேண்டும். பன்னிரண்டு ஆதியர்களின் ஒருவரான 'பூஷா' என்பவரையோ, சூரியனார் கோவிலில் எழுந்தருளியுள்ள சூரிய நாராயணமூர்த்தியையோ அல்லது திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சூரிய லிங்கத்தையோ வழிபட்டாலும் நல்ல உடல் ஆரோக்கியம் பெற்று சிறந்த முறையில் புகழுடன் வாழலாம்